![]() |
| மூங்கில் மூச்சு |
ஆனந்த விகடனில் மூங்கில் மூச்சை நிறுத்திக் கொண்ட பிறகு அவ்வப்பொழுது சொல்வனத்தில் சுகாவின் புதிய பழைய கட்டுரைகளை படிப்பதுண்டு. ஒருமுறை சொல்வனத்திலே செண்பகத்தக்காவின் குரல் என்ற தலைப்பில் "என் வானிலே ஒரே வெண்ணிலா" புகழ் ஜென்சியைப் பற்றி சுகா அல்வாத்தமிழில் எழுதிய கட்டுரையைப் படித்து/கேட்டு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு சிலாகித்துக் கொண்டே இருந்தேன். "அடுக்களையின் குழம்புக் கொதியினூடே கேட்கும் அக்காவின் குரலாக, குளியலறையிலிருந்து சந்திரிகா சோப்பின் நுரைத்த நறுமணத்துடன் வெளியே கசிந்து ஒழுகும் அத்தை மகளின் குரலாக, மதிய உணவுக்குப் பின் ஒட்டுமொத்த வீடும் உறங்கிக் கொண்டிருக்க, ஒருச்சாய்த்துப் படுத்தபடி, ‘ராணி’ புத்தகத்தைப் புரட்டியவாறே, தனக்கு மட்டும் கேட்கும் விதமாகப் பாடும் மதினியின் குரலாக" என்று ஜென்சியின் குரலை உவமைப்படுத்தியிருந்தார் சுகா. தொடர்ச்சியாக ஏழாவது முறை இந்தக் கட்டுரையை படித்த பொழுதில், அது எப்படி இவரால் மட்டும் ஒவ்வொரு காற்புள்ளி, அரைப்புள்ளியிலும் கூட நெல்லையை உரித்து வைக்க முடிகிறது என்று வியந்து உச்சந்தலையில் கை வைத்தேன். குளிர்ந்திருந்தது.
இந்த வருடம் புத்தகக் கண்காட்சிக்கு சென்ற பொழுது மூங்கில் மூச்சு தொகுப்பாக வந்திருந்தால் வாங்க வேண்டும் என்று நினைத்துச் சென்றிருந்தேன். ஆனால் ஒரு நண்பன் போன் செய்து தான் மூங்கில் மூச்சு வாங்கி விட்டதாகவும் முடித்து விட்டு என்னிடமே தந்து விடுவதாகவும் சொன்னான். நானும் பட்டியலின் மற்ற புத்தகங்கள் வாங்குவதில் மும்முரமாகி விட்டேன். கிழக்கை சுற்றிக் கொண்டிருக்கும் பொழுது தற்செயலாக கண்ணில் பட்டது "தாயார் சன்னதி - சுகா". திருப்பிப் பார்த்தேன் பாலுமகேந்திரா அவர்களின் பொழிப்புரை இருந்தது. தாமதிக்காமல் தூக்கிக் கொண்டேன். அதைப் படிக்க ஆரம்பித்த சில மணித்துளிகளிலேயே மனசுக்குள் முடிவானது. இது கடகடவென்று வாசித்துத் தள்ளிவிடக் கூடிய தொகுதி வகையறாப் புத்தகம் அல்ல. நமக்குப் மிகவும் பிடித்த பால்கோவாவையோ, நெய்விளங்காவையோ எப்படி விள்ளல் விள்ளலாக விண்டு ருசி அனுபவித்து நீண்ட நெடுநேரம் சாப்பிடுவோமோ அப்படி வாசிக்க வேண்டிய புத்தகம். ஒரு நாளைக்கு மூன்று, அதிகம் ஆனால் நான்கு பகுதிகளுக்கு மேல் வாசிக்கக் கூடாது என்று சுயசத்தியம் செய்து கொண்டேன். வாசிக்க வாசிக்க மகிழ்ச்சி வலுத்துக் கொண்டே வந்தது.
![]() |
| தாயார் சன்னதி |
இந்தப் புத்தகத்தில் "ஜெயன்ட் வீல்" என்ற பெயரில் ஒரு அத்தியாயம் வருகிறது. எங்கள் நெல்லையின் வருடாந்திர கவர்மெண்டுத் திருவிழாவான பொருட்காட்சி @ பொருக்காச்சி பற்றியது அது. ஒரு ஞாயித்துக்கிழமையின் பின்னிரவில்தான் அதை முதல் முறை வாசித்தேன். அந்தப் பொருட்காட்சிக்கு சுகா தன்னுடன் வந்ததாய்ச் சொல்லியிருக்கும் கமிஷன் கடை சிவப்பழ பெரியப்பாவெல்லாம் நான் பாளை காந்தி மார்க்கெட்டில் பார்த்த பற்பல பெரியவர்தான். பேல்பூரி முதல் டில்லி அப்பளம் வரை, மரணக்கிணறு முதல் அறநிலையத்துறை ஸ்டால் வரை எல்லாவற்றையும் நிதர்சனமாய்க் கடந்து ஜெயன்ட்வீல் ராட்டுப் பக்கம் வந்தது. ஜெயன்ட்வீல் சுற்ற ஆரம்பித்தது. நான் சிரிக்க ஆரம்பித்தேன். ஜெயன்ட்வீல் நின்றது. வெறித்தனமாய்ச் சிரிக்க ஆரம்பித்தேன். அடக்க வாய்ப்பே இல்லாமல் நினைத்து நினைத்து மீண்டும் மீண்டும் படித்துப் படித்து தலயணையில் மோதி மோதி சிரித்துக் கொண்டே இருந்தேன். "ரெண்டு மணிக்கு ஏன் இப்படிச் சிரிக்கிற" என்றவாறே பக்கத்து அறையில் உறங்கிக் கொண்டிருந்த அப்பா எழுந்து வந்து விட்டார். "உக்காந்து இத வாசிங்க" என்றேன். "காலைல வாசிக்கிறேன்" என்றார் அப்பா அரைத்தூக்கத்தில். "இல்ல. இப்பவே வாசிங்க" என்றேன். கண்ணாடியை எடுத்து வந்து போட்டுக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தார். நான் சிரிப்பை அடக்கமாட்டாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டு நிமிடம் கடந்திருக்கும். இந்த முறை அப்பாவுக்கு ஜெயன்ட்வீல் சுற்ற ஆரம்பித்தது. அரை நொடியில் புத்தகத்தை நெஞ்சில் சாய்த்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தார். "முழுசுமா படிங்க" என்றேன். சிரிப்பை அடக்கமாட்டாமல் படித்து முடித்தார். "அனுபவிச்சு எழுதிருக்கான்டா" என்று சொல்லிவிட்டு விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார். ஒருவர் சிரிப்பை மற்றவர் பார்த்து "சிரிக்காத..” “சிரிக்காதீங்க..." என்று சொல்லிச் சொல்லியே ஒரு அரை மணி நேரமாய்ச் சிரித்துக் கொண்டிருந்தோம். இப்பொழுது நினைத்தாலும் அலுவலகத்தில் அமர்ந்து கோட்டிக்காரனாய்த் தனியாக சிரித்துக் கொண்டே இருக்கிறேன். இந்தப் பானைக்கான ஒரு சோறுதான் இது.
இந்தப் புத்தகத்தோடு ஒரே ஒரு வருத்தம்தான். 44 அத்தியாயங்களை குறைந்தது 12 நாட்களுக்காவது வாசிக்க வேண்டும் என்று சுயசத்தியம் செய்து கொண்டதை மட்டும் என்னால் காப்பாற்ற முடியவில்லை. ஐந்து நாட்களிலேயே முடித்து விட்டேன். இரண்டாம் முறை ஓடிக் கொண்டிருக்கிறது. இது ஒரு பால்கோவா பேக்டரி.









4 பேர் சொன்னது என்னான்னா..:
மலரும் நினைவுகளை அசை போடுகிறது பதிவு...
வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டது உங்கள் அருமையான விமரிசனம்.
I loved suka all the time I read... but your kirukkal is very nice. Ram I love tirunelveli for many reasons. and these are few in them...
Palanikkumar
எனக்கு சுதந்திரம் சார் என்றாலே நினைவுக்கு வருவது கலைஞரும் அவரது கல்லக்குடி போராட்டமும் தான், ஒரு வகையில் அரசியலின் மீது ஈடுபாடு வருவதற்கு அவர் தான் காரணம்.. You made me to remember the things which I forgot, Thanks for this post. Should I say anything about your writing?I don't think so, it speaks for itself :)
Post a Comment