Thursday, July 30, 2015

முடியும் !!!

கடுமையான மனஅழுத்தத்தில் ஏதோ ஒரு நாள் அதிஷாவின் இந்தப்பதிவை படிக்க நேர்ந்தது. ஒரு முறை.. இரு முறை.. நூறு முறை வாசித்தேன். ஒரு நல்ல விஷயத்தை செய்வது பெரிது. அப்படிச் செய்வதைப் பற்றி எழுதுவது அதனினும் பெரிது. அப்படி எழுதுவதன் மூலம் அதற்கான inspirational Factorஐ அப்படியே மற்றவர்க்கு கடத்துவதென்பதெல்லாம் வரம். அந்த வரம் அதிஷாவுக்கு வாய்த்திருக்கிறது. தேங்க்யூ ப்ரோ.http://www.athishaonline.com/2014/12/blog-post.html

இந்தப் பதிவு என்னை பெர்சனலாக அறியாதவர்களுக்கு ஆயாசத்தையும், அறிந்தவர்களுக்கு ஆச்சரியத்தையும் அளிக்கக்கூடும். ஏனெனில் என்னை அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியக்கூடும் நான் எவ்வளவு காட்டுத்தனமான சோம்பேறி என்பது. மாடியில் படுத்துக் கொண்டு கீழே உள்ளவனுக்கு அலைபேசியில் அழைத்து மேலே வர வைத்து "செந்தில் செந்தில் அந்த ஃபேன் சுவிட்ச்ச ஆன் பண்ணிட்டுப் போயிரேன் ப்ளீஸ்" என்று கடுப்படிக்குமளவுக்கு. எந்த வேலை எவ்வளவு முக்கியமான வேலையையும் அடுத்த வீக்கெண்டுக்கு சற்றும் சலனமேயில்லாமல் தள்ளி வைத்து விட்டு நாள் முழுவதும் படுத்துக் கொண்டே இருக்குமளவுக்கு. சிறு வயது முதலே கொஞ்ச தூரம் நடப்பதற்கே பயங்கர எரிச்சலாக இருக்கும். அடுத்த தெருவில் இருக்கும் கடைக்குக் கூட பைக்தான். அப்படியே ஏதாவது வெளியூரோ சுற்றுலாவோ செல்லும் போது, வழியே இல்லாமல் 100,200 மீட்டர் நடக்க வேண்டி இருந்தாலும் இருவரை துணைக்கு வைத்துக் கொண்டு தோள்களில் கைபோட்டபடியேதான் நடப்பேன். என்னுடைய எடையில் பாதியை அவர்களை சுமக்க வைக்கும் உத்தி அது. அந்தளவுக்கு மிகக்கடுமையான சோம்பேறி.. சிறு வயது முதல் கிரிக்கெட் கூட பெரிதாக விளையாடியதில்லை. ஏரியாவி நடக்கும் டோர்னமன்டுகளில் கூட கமென்ட்ரியிலோ, காம்பியரிங்கிலோதான் உட்கார்ந்திருப்பேன்.

இந்நிலையில்தான் ஓட வேண்டும் என்று முடிவு எடுத்தாகி விட்டது. சரி நாளை காலையிலிருந்து ஓட வேண்டும்... நாளை ஒரு நாள் மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் ஓட வேண்டும். நான்கு அடி நடப்பதற்கே நாப்பது நிமிடம் யோசிப்பேன். இதில் ஓட வேண்டும். அலாரம் அடித்து எழுந்து ஓட ஆரம்பித்தால் மிகச்சரியாக நானூறு மீட்டரில் மூச்சு ஏற இறங்க வாங்கியது. இதயம் நொடிக்கு இரண்டாயிரம் முறை துடித்தது. கண்களும் லைட்டாய் இருட்டிக் கொண்டு வந்தது. ஆனாலும் விடாமல் அடுத்தடுத்த நாட்களும் பள்ளிக்கரணையின் சந்து பொந்துகளில் புகுந்து புறப்பட்டு ஓட்டமும் நடையுமாக நாட்கள் நகரத்தொடங்கியது. ஓடுவதை விட ஒவ்வொரு நாளும் காலையில் 5, 5.30 மணிக்கு எழுவது என்பது கடுமையான சவாலாக இருந்தது. "காலைலல்லாம் எந்திரிக்க முடியாது"ன்னு சொல்லி கல்யாணத்தையே பத்து மணி முகூர்த்தத்திற்கு வைக்கச் சொன்னவன். இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக உடலும் மனமும் பழக்கப்பட ஆரம்பித்தது. இரண்டு மூன்று என்று தொடர்ச்சியாக ஓடும் கிலோமீட்டர்களின் அளவு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்தது.


அப்பொழுதுதான் இணையத்தில் Dream Runnersன் அரை மராத்தான் ஓட்டத்தைப் பற்றியும் அதற்காக அவர்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் பயிற்சியைப் பற்றியும் தெரிய வந்தது. ஆனாலும் பயங்கர தயக்கம். என்னால் அங்கே பயிற்சிக்கு வருபவர்களுக்கு ஈடுகொடுத்து ஓட முடியுமா, எல்லாரும் ஏளனமாய்ப் பார்க்கக் கூடுமோ என்று. இருந்தாலும் ஏப்ரல் கடைசியில் ஒருவாறாக மனதைத் தேற்றிக் கொண்டு ரெஜிஸ்டர் செய்தேன். அவர்களே அழைத்து இனிமேல் வாராவாரம் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 4.55க்கு சோழிங்கநல்லூர் வந்துவிடச் சொன்னார்கள். அங்கு முதல் நாள் போனதுதான்... எவ்வளவு சரியான முடிவெடுத்தேன் என்று இப்பொழுது நினைத்தாலும் பூரிப்பாய் இருக்கிறது. ஓட்டமும் ஓட்டம் சார்ந்த இன்னபிற பயிற்சிகளும். சென்னையின் மிகத் தேறிய ஓட்டக்காரர்கள் பலரும் அங்கே வந்து என்னைப்போல் பல புதிதாக ஓட ஆரம்பிக்கும் பலருக்கும் மிகப் பொறுமையாக மோடிவேட் செய்யச்செய்ய... ஓட்டத்தின்பால் அளவிலா போதை வரத்துவங்கியது. Thank you So much OMR Dreamers and all the volunteers who helped us in transformation. https://www.facebook.com/groups/omrdreamers/

கொஞ்சம் கொஞ்சமாக ஓடி ஓடி 10 KM தடையில்லாமல் ஓடுமளவிற்கு வந்த பொழுது வலது கனுக்காலில் கடுமையான வலி. இரண்டரை வாரம் ஏதும் செய்யா ஓய்வு. மீண்டும் தேறி வந்து ஓட்டம்... ஓடி ஓடி 15 KMம் கொஞ்சம் வசப்பட்டது. ஆரம்பித்தலிருந்து முந்தாநாள் வரை ப்ராக்டிஸ் செய்த மொத்த தூரம் 425 கிலோமீட்டர்கள். ஆனால் தொடர்ச்சியாக 15க்கு மேல் ஓடியதில்லை. இதை வைத்துக்கொண்டுதான் இன்று DRHMன் அரை மரத்தான் ஓடி முடித்தேன். மிகச்சரியாக 21 KM ஓடிக் கடந்தது முடித்தது 2 மணி 53 நிமிடத்தில். 2.40 என்று மனதில் நினைத்திருந்தேன். முடிக்க முடியவில்லை. அதனாலென்ன. ஒரு நாள்... இரு நாளா.. வாழ்நாளும் இருக்கிறது ஓட...
smile emoticon



ஓடியதைத்தாண்டி நடந்த சில நன்மைகள்... நான் ஏறி நின்றால் 81,82ல் முட்டிக் கொண்டிருந்த எடை எந்திரம் தற்பொழுது 71,72லேயே சற்று தட்டித்தான் நிற்கிறது. பேன்ட்டுக்கு போடும் பெல்ட்டில் இரண்டு முறை புதிதாக ஓட்டை போட்டிருக்கிறேன். அதிகாலை 4, 5 மணிக்கெல்லாம் தயக்கமேயில்லாமல் எழுந்து கொள்ள முடிகிறது. கொஞ்சம் சோம்பேறித்தனமில்லாமல் வீட்டில் சில வேலைகளைச் செய்ய முடிகிறது. கொஞ்சமும் அசதியில்லாமல் நிதிலாவை தூக்கிக் கொண்டே திரிய முடிகிறது. மிக நல்ல மனநிலையில் சில முடிவுகளை எடுக்க முடிந்திருக்கிறது. From being an extreme bed bug to a 21K finisher, What not... All is well. All is well. smile emoticon smile emoticon

Wednesday, April 24, 2013

பாட்டையா வந்திருந்தார்...


சில மாதங்களுக்கு முன்னதாக முகப்புத்தகத்தில் ஒரு நிலைத்தகவலைப் பகிர்ந்திருந்தார் பாரதி மணி பாட்டையா. பாரதி மணி - 2002ம் ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேராதரவினாலும் அந்த ஏழாவது வரத்தினாலும் தமிழக முதல்வராக ஏகோபித்த வெற்றி பெற்று சுமார் 30 நிமிடங்கள் தமிழகத்தின் நிரந்தர ஆட்சியமைத்தவர் என்று சொன்னால் உங்கள் அனைவருக்கும் விளங்கும் என்று எண்ணுகிறேன்ம்ம்ம்... பழ சொரூபமாக இருந்த கந்தன் ஐயா... அவரேதான்... அவர் வெளியிட்டிருந்த நிலைத்தகவல் இதுதான்.. 

"சில நாட்களில் சென்னையில் சுஜாதாவின் 'கடவுள் வந்திருந்தார்' நாடகத்தை சென்னையில் மேடையேற்ற முடிவு செய்திருக்கிறோம்."


'க-ட-வு-ள்           வ-ந்-தி-ரு-ந்-தா-ர்' 

எனக்கு அவை மந்திரசொற்கள். வாத்தியார் நமக்காக விட்டுச் சென்றுள்ள வைரக்குவியலுக்குள் புதைந்திருக்கும் விலைமதிப்பில்லா வைரம் அது. ஒரு நாளின் சென்னை பெண்ங்களூரு பேருந்து பயணத்தில்தான் அந்த நாடகத்தை புத்தகமாக வாசிக்க நேர்ந்தது. வேளச்சேரியில் இருந்து கிளம்பிய பேருந்து அடையார், கிண்டி வழியாக கோயம்பேடு நெருங்கிய பொழுதில் அதை நான் வாசித்து முடித்திருந்தேன். அத்தனை சிறிய புத்தகமது. வாசிக்கும் பொழுதிலும் வாசித்து முடித்த பொழுதிலும் நடுநிசி என்பதையும் மறந்து நான் விழுந்து விழுந்து புரண்டு புரண்டு சிரித்துக் கொண்டிருந்ததை சக பயணிகள் ஒரு மாதிரிதான் பார்த்தார்கள். அதற்கான காரணம் சீனிவாசனையும் என்னையும் தவிர இவ்வுலகில் வேறு எவர் கண்ணுக்கும் ஜோ தெரிய மாட்டான் என்பதுதான். சுஜாதாவின் மீதான நேசிப்பு  மேலும் நான்கு மடங்கு அதிகரித்த இரவு அது. Science Fictionஐ இத்தனை ஜனரஞ்சகமாக சொல்ல வேறு ஒரு கொம்பனாலும்... ம்ஹூம். அதற்கு பின் இரண்டு மூன்று முறை வாசித்து கிட்டத்தட்ட தலைமனப்பாடமாகிப் போனதெல்லாம் தனிக்கதை.

இந்தக் கடவுளைத்தான் பாரதி மணி பாட்டையா கண்முன்னால் கொண்டு வரப் போவதாக அறிவித்திருந்தார் என்பதால் அதனைக் கண்டிப்பாக பார்த்தே தீர வேண்டும் என்ற முடிவை என்னளவில் எடுத்துக் கொண்டேன். அது முதல் அவர் எந்த நிலைத்தகவல் போட்டாலும் போய் "நாடகம் எப்பொழுது?" என்ற கேள்வியைத் தவறாமல் கேட்டு வந்தேன். சில மாதங்கள் கடந்து போன பிறகு சமீபத்தில் அவர் 23,24ம் தேதிகளில் நாடகம் அரங்கேற இருப்பதாய்ச் சொல்லி விளம்பரங்கள் வெளியிடத் தொடங்கினார். காத்திருந்து காத்திருந்து... ஜோவைப் போலவே நானும் 220 வோல்டில் சார்ஜேற்றி காத்திருந்து காத்திருந்து.... இன்று நாடகத்தை பார்க்க நேரிட்டது.... உள்ளே நுழைந்தவுடனேயே மேடையில் இருந்த ரேடியோ, குடை, சந்தன மாலை, ஜன்னல், சைடில் இருந்த மாடிப்படி... ஒவ்வொன்றாய்ப் பார்த்து உடன் வந்த நண்பன் கருப்புவிடம்  'இதுக்கு இது... அதுக்கு அது' என்று அந்தந்த காட்சிகளை விளக்கிக் கொண்டிருந்தேன்.



நாடகம் ஆரம்பித்ததில் இருந்து இதுவரையிலும் உள்மனது குத்திக் கொண்டே இருக்கிறது... 76 வயதில் அவர் கொட்டியிருக்கும் அசுர உழைப்பைக் கணக்கில் கொள்ளும் பொழுதில் நாமெல்லாம் இந்த 28 வயதில் என்ன கிழித்துக் கொண்டிருக்கிறோம். எப்படி இத்துனை வசனத்தையும் நினைவில் வைத்துப் பேசினார் என்று யோசிக்கவே முடியவில்லை. அதையும் தாண்டி... ஓடுகிறார்... ஈஸி சேரில் ஆடுகிறார்... கம்பெடுத்துத் துரத்துகிறார்... நாடகம் நடந்த ஒவ்வொரு மணித்துளியிலும் மொத்த அரங்கத்திற்கும் positive energyஐ pass செய்து கொண்டே இருக்கிறார் பாட்டையா. வாசித்த பொழுதில் எந்தெந்த வசனங்களுக்கெல்லாம் வாய்விட்டுச் சிரித்தேனோ அந்தந்த வசனங்களுக்கெல்லாம் அதைவிட நான்கு மடங்கு சிரிக்க வைத்தார் பாட்டையா.  Truth, Just truth. இது உண்மை... கொஞ்சமும் கொத்தமல்லி கருவேப்பிலை தூவப்படாத நிர்வாணமான உண்மை.

என்ன மாதிரியான எக்ஸ்பிரஷன்ஸ்... எவ்வளவு எதார்த்தமான நடிப்பு.... It was just awesome..

"கல்யாணம்... ப்ரஜாவிருத்தி இருக்கா பாரு"

"ப்ரஜாவிருத்தி காணோம்"

"பிள்ளைப்பேறு இருக்கானுட்டு பாரு"

"ஓ அதுவா.. மற்றொரு மனிதன் பிறப்பதற்கா... அது நானும் ஒரு பெண்ணும் கைகுலுக்கிக் கொள்வோம்.. அவள் பையிலிருந்து ஒரு குட்டி ஜோவை எடுத்துக் கொடுப்பாள்.. நீங்க?"

"இங்க கைகுலுக்கி ஒரு பத்து மாசம் ஆவும்.." "தேவலையே.. இடுப்பு வலி கிடுப்பு வலி ஒன்னும் கிடையாதா?"

பாட்டையாவின் மாடுலேஷன் ஒவ்வொரு காட்சியிலும் அட்டகாசம். என்ன மாதிரியான குரல் அவருக்கு. கணீர் கணீரென்று அரங்கம் நிறைத்து மனதில் அறைந்த குரல். நான்கு மணி நேரம் கடந்த பின்னும்-இன்னும் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. சினிமா விமர்சனங்களில் தத்ரூபம், இயல்பு, எதார்த்தம் என்றெல்லாம் எழுதினாலும் அது எப்படிப்பார்த்தாலும் டெக்னாலஜிக்குட்பட்ட எதார்த்தம். ஆனால் எந்த டெக்னாலஜியுமில்லாமல் ஒரு நவீன நாடகத்தின் மூலம் மனம் நிறைத்திருக்கிறார் பாட்டையா.

மிகவும் எதிர்பார்த்த அந்த பெண் பார்க்கும் காட்சி... இத்தனை கதாப்பாத்திரங்களை வைத்து... அதில் ஒரு கதாப்பாத்திரம் கண்ணுக்குத் தெரியாத கதாப்பாத்திரம்.... நிறைய parallel dialogue deliveries. Composingகிற்கு மிகவும் கஷ்டம் என நான் நினைத்த காட்சி அது. வேட்டியைக் கச்சம் கட்டிய ஜோ... அதைப்பார்த்து சிரிக்கும் சீனிவாசன்... 'நன்னிலத்துல எந்த சுந்தர்ராஜன்?' என்பதை பல்வேறு வகைகளில் கேட்கும் மாப்பிளையின் அப்பா... பஜ்ஜிக்காக பாடாய்ப்படும் சேஷகிரி ராவ்... சேஷ்டைக்கார அம்பி(அம்பிகாவாக மாற்றியிருக்கிறார்கள்)... பாட்டு பாடும் வசு... இத்தனையும் ஒரு காட்சிக்குள் வர வேண்டும். என்னளவில் நாடகத்தின் உச்ச காட்சி என நான் இதைத்தான் கொள்வேன். வாசிக்கும் பொழுதிலேயே கொஞ்சம் கற்பனை வளம் குறைந்தவர்களுக்கு காட்சிபடுத்தி யோசிப்பதற்கே கஷ்டமான காட்சி இது. ஆனால் உண்மையிலேயே இக்காட்சி தொகுதியை அட்டகாசப் படுத்தி விட்டார்கள். எத்தனை முறை ரிகர்சல் செய்தீர்கள் அய்யா? It was just unbelievable. 

அம்பியை அம்பிகாவாக மாற்றியது... சுந்தர் நடுவீட்டில் குளிக்காதது, சோப்பு கேட்காதது தவிர வேறெதுவும் மாற்றப்படவில்லை. மாற்றப்பட்டதாய்த் தெரியவில்லை.

பூசாரியாய் நடித்தவர் பட்டையைக் கிளப்பினார்.

"ஜாலக்காள்"

"அவ யாரோட அக்காளா இருந்தாலும் உன்னைய விடமாட்டேன்டா"

சுந்தர், கொல்ட்டி வசு, பத்மஜா மாமி, டாக்டர் எல்லோருமே பிரமாதமான நடிப்பு.... அசத்திட்டேள் போங்கோ.

"ஸ்வாமி... தெய்வமே... கல்யாணமாகி ஆறு வருஷமா எனக்கு கொழந்தை இல்ல...." என்று டாக்டரே சொல்லும் பொழுதில்...

"பரவாயில்லை அன்பனே.. அவளை அப்புறம் அழைத்து வா"

ROFL Maxxxxxல் அரங்கம் நிறைந்த கைதட்டல்.



நாடகம் முடிந்த பிறகு அனைவரையும் அறிமுகப்படுத்தி பாட்டையா பேசியதுதான் மிக நெகிழ்வான விஷயங்கள்...  

6:15க்குன்னு சொல்லி 6:30க்கு போட்டதற்காக மன்னிப்புக் கேட்டார்.

 "என்னங்க... 6.30க்கு நாடகம்னு சொல்லிட்டு 6.30க்கே போடுறீங்க...." என்று கேட்டதாய்ச் சொன்னார். 

ஆனால் நாடகம் நடப்பது சென்னையில் என்னும் வகையில் - கேள்வியில் நியாயம் இருந்ததை ஒத்துக் கொள்ள மறுத்தார்.

சென்னை அரங்கம் ஒரு குடும்பம். ஒவ்வொருவரும் என்னை வைத்துத் தாங்குகிறார்கள் என்றார். "வயசு 76... வயசாயிடுச்சுல்ல" என்பதை அவர் மீண்டும் மீண்டும் சொன்னாலும் 20ன் இளமை இன்னும் கொப்பளிக்கிறது அவரிடம்.

'அட.. இன்னிக்கு நாந்தான ஹீரோ...' என்று புன்னகை பூக்கும் பாட்டையாவிடம்தான் எத்தனை குறும்பு... 

டைம் ஷிப் சம்பந்தமான காட்சிகளுக்கு சில டெக்னாலஜி ---- வஸ்துக்களை தயார் செய்து அது workout ஆகாமல் போனதைப் பற்றி சிறிது வருத்தப்பட்டார். ஆனால் அந்த ஸ்கிரீனைப் பிடித்துக் கொண்டு எட்டிப்பார்த்தபடியே கணிர்க்குரலில் நீங்கள் பேசிய வசனங்களின் மூலம் டெக்னாலஜியையெல்லாம் just like that மிஞ்சி விட்டீர்கள் பாட்டையா.

"நோ போட்டோகிராப்ஸ்.. நோ ஆட்டோகிராப்ஸ்" என்று சுண்டு சுள்ளானெல்லாம் பந்தா காட்டும் இந்தக் காலகட்டத்தில் மேடைக்கு வந்த ஒவ்வொருவரிடமும் கைகுலுக்கி சிரித்துப் பேசினார் பாட்டையா. You were very humble Sir..



இது சென்னை அரங்கத்தின் முதல் நாடகத்தின் முதல் நிகழ்வு. ஒரு மிகச்சிறந்த விஷயத்தின் முதல் நிகழ்வில் பங்கெடுத்த ஆத்ம திருப்தியும் புல்லரிப்பும் இன்னும் மிச்சமிருக்கிறது.

இவை எல்லாம் தாண்டி 2088க்கும் 2188க்கும் நம்மை அழைத்து போக வல்ல வாத்தியாரும் அங்கிருந்த காலி இருக்கைகளில் ஏதோ ஒன்றில் அமர்ந்து நாடகத்தையும் எங்களையும் கவனித்துக் கொண்டுதான் இருந்திருப்பார் என்ற நினைவும் எழாமல் இல்லை. ச்ச.. சீக்கிரமாவே இல்லாமப்பூட்டியே வாத்யாரே... We miss you Sujatha. We miss you so much.

                                               ####################

இப்படி ஒரு அருமையான அனுபவத்தை நேற்று தவற விட்டவர்கள் இன்று(24ம் தேதி) கண்டிப்பாக சென்று பார்க்கவும்.

இடம் : சென்னை ம்யூசியம் தியேட்டர், எக்மோர்.

நேரம் : மாலை 6:15

அனுமதி இலவசம். 

பைக் பார்க்கிங் மூன்று ரூபாய். 

கொஞ்சம் ஸ்வீட்டு காரமெல்லாம் வாங்கிக் கொண்டு போய் விடுங்கள்... உள்ளே கடைகள் ஏதுமில்லை.

ஆகவே நண்பர்களே இலவசமாக ஒரு ஈடு இணையில்லா பொழுதுபோக்கை தவற விட்டு விடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டு....

 ####################

டிஸ்கி : நாடக இன்டர்வலில் இன்றைய உலக புத்தக தினத்தை முன்னிட்டு "லியோ டால்ஸ்டாயின் - மனசாட்சியின் குரல்" புத்தகம் வாங்கி பரிசளித்தான் கருப்பு.. நன்றி மாப்பி :)

Sunday, March 31, 2013

சென்னையில் ஒரு நாள் - A must watch...

சில படங்கள்தான் பார்த்துத் திரும்பிய பிறகு நெஞ்சை விட்டகலாமல் அதைப் பற்றியே நம்மை யோசிக்க வைக்கும். கணம் மாறாமல் நாமும் அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருப்போம். இது அப்படி ஒரு திரைப்படம். எனக்கு இன்னும் நானே ஒரு SUV genere Carஐ 140 - 150 கி.மீ வேகத்தில் சுமார் 2 மணி நேரம் ஆக்சிலரேட்டரில் இருந்து காலே எடுக்காமல் அழுத்து அழுத்தென்று அழுத்திய உணர்வு மேலிட்டுக் கொண்டே இருக்கிறது. ஒரு நாள், ஒரு வாரம், ஒரு வருஷம் ஏன் பத்து வருஷம் கூட பஞ்சாகப் பறந்து விடுவதுதான் மனித வாழ்வின் இயல்பு. “நேத்துதான் ஜான்ஸ் ஸ்கூல்ல போய் 10th mark sheet வாங்குன மாதிரி இருக்கு...” இது நான் அடிக்கடி சொல்லும் வசனம். வசனமென்பதை விட வாயிலிருந்து வரும் தன்னிசையான உணர்வு. இப்படிப்பட்ட கரைந்தோடும் காலத்தில் சில நாட்கள், மணி நேரங்கள், மணித்துளிகள் ஆக மொத்தத்தில் தருணங்கள் வரலாறாக மாறிவிட வல்லவை. அப்படி வரலாறான ஒரு நாளைப் பற்றிய படம்தான் இது.



உடலுறுப்பு தானம், இதய மாற்று அறுவை சிகிச்சை போன்ற வார்த்தைப் பிரயோகங்களை எல்லாம் தமிழகத்தின் கடைநிலை பாமரனுக்கும் கொண்டு சேர்த்த நிகழ்வு ஹிதேந்திரனின் மூளைச்சாவும் அது தொடர்ந்த சம்பவங்களும். அப்படியான ஒரு உண்மைக்கதையைச் சுற்றிலும் நகரும் கதைக்களம். காரில் இதயம் சென்னை முதல் வேலூர் வரை செல்வதுதான் திரைக்கதையின் முக்கிய அம்சம் என்றாலும் அதைச் சுற்றிலுமான சம்பவங்களை திறமாக கோர்த்திருப்பதில் இந்தப் படம் - பிரமாதம்ம்ம்ம். சிலருக்குத் தோன்றக் கூடும் இப்படியான படு அமர்க்களமான, வேகமான கதையில் குடும்ப நிகழ்வுகள், சோகம், கிளைமேக்ஸ் ஜிந்தா காலனி சீக்வன்ஸ் உட்பட unwanted emotions and clichés அவசியமா என்று.. ஆனால்.... என்னைப் போன்ற சராசரி சினிமா ரசிகர்களுக்கு, கதையோடு ஒன்றிப் போக வேண்டி இந்த சென்டிமென்ட்டும் க்ளிஷேக்களும் மிக மிக அவசியமாகிறது.  

ஏதோ வழக்கமாக ராதிகா - சரத்குமார் நடத்தும் கடல் கடந்த நட்சத்திரக் கலைவிழாவுக்கு வந்திருப்பது போல படம் முழுதுமாக நட்சத்திரப் பட்டாளம்.  சின்ன சின்ன கதாப்பாத்திரங்கள் ஆனாலும் ஒவ்வொருவரும் தங்கள் பணியைச் செவ்வனே செய்திருக்கிறார்கள். ஜெயப்பிரகாஷ், லஷ்மி ராமக்கிருஷ்ணன் to be defenitely mentioned kind of acting – awesome as usual. பிரசன்னா – absolutely an underplay acting and it is well done. சேரன் - இவர் இந்தப் படத்தில் அழவும் சிரிக்கவும் இல்லை என்ற காரணத்தால் – Kudos சேரன். கலக்கிட்டீங்க. பிரகாஷ்ராஜ் – A typical replica character from most of his previous movies. ஆனாலும்... 'கேமரா ரோலிங்... செளமியா டீச்சர்.. அவங்க ரொம்ப நல்ல டீச்சர்... She takes special care of her..." முதலான சீன்களில் class Prakash. இனியா, அந்தக் கதாப்.... பாத்... சரி வேணாம் விடுங்க. :) சரத், ராதிகா, மின்னலைப்பிடித்து பாட்டுல ஆடுன மேட்டர் மேன், எங்கேயும் எப்போதும்ல பஸ்ஸ தொரத்தி தொரத்தி மனைவி கூடவே வருவானே அந்தப் பையன் - இவங்க எல்லாருமே பாத்திரத்துக்கேற்ற திறமான  தேர்வு.



"We have to give him the best good bye Gift... அவங்கப்பாம்மாவ சம்மதிக்க வை "

“உங்களுக்கெல்லாம் என் பையன் சாகக் கெடக்குற ஒரு உயிரு.... ஆனா எனக்கு அவன் உயிரோட இருக்க என் பையன் சார்..”

என்பது மாதிரியாக வசனங்கள் பல இடங்களில் படு ஷார்ப்.

 பாடல்கள் ஒன்றும் நினைவில் நிற்கவில்லையெனினும் கதையோட்டத்துக்கு தடையென்று சொல்லும் வண்ணம் எதுவுமில்லை என்பது ஆறுதல்.டெக்னிக்கலா சிலாகிக்க வேறெதும் பெருசா இருந்துச்சான்னு யோசிக்க முடியல. கவனிக்கவும் இல்லை. கதையோட்டத்தின் வீரியம் அப்படி. .  “The mission is ON” என்று சரத் சொல்வதிலிருந்து ஆரம்பிக்கும் படம்.. எடுக்கும் வேகம்... செம செம  செம ஸ்பீடு.  Shot By Shotன்னு யோசிக்க முடியல. ஆனால் படம் குடுக்க வேண்டிய Impact ஐ குடுக்க வேண்டிய அளவில் மிகச்சரியாக கொடுக்கிறது என்ற வகையில்...

இது மாதிரியான படங்கள் வணிக ரீதியான வெற்றி அடையாத பட்சத்தில் சில பத்தாண்டுகள் கழித்து நமக்கு டெலெக்ஸ் பாண்டியன்களும், பாதி பகவன்களும்  மட்டுமே திரைப்படங்களாக கிடைக்கும் பேராபத்தும் பெருங்கஷ்டமும் இருப்பதால்.... Mind it and Must watch.

ஆக மொத்தத்தில் "சென்னையில் ஒரு நாள்" -  உணர்வுப்பூர்வமான ஒரு ரோலர் கோஸ்டர் ரைட்.

150/150.

Saturday, March 16, 2013

பரதேசி - A Film By Bala

பாலா... இவன் தான் பாலா... தமிழ் சினிமாவை மற்றொரு தளத்துக்கு எடுத்துச் செல்ல வந்த பிதாமகன் என்று எல்லாராலும் ஒத்துக் கொள்ளப்பட்ட கலைஞன். ஆனால் சில காலமாக, அதுவும் அதிகப்படியாக இந்த சமூக வலைதளக் காலகட்டத்தில் எதையும் குறை காணும் நோக்கோடு சுற்றும் சிலரின் நிலைத்தகவல்களிலும் பகிரும் வீடியோக்களிலும் "பாலா படமா... கொடூரமா இருக்கும்" என்ற பிம்பம் காட்டப்பட்டு வருவதைக் காண முடிகின்றது. அதுவும் அந்த "பரதேசி Reality teaser" என்ற படப்பிடிப்புத் தளத்தில் 'அடிக்கும் மாதிரியான' காட்சிகள் கொண்ட காணொளி வெளியான அன்று 'பாலா ஒரு சைக்கோ' என்று சில பொய்க்கோக்களும் 'அடுத்த படத்துல விஜயைப் போட்டு இதே மாதிரி அடிங்க, சிம்புவப் போட்டு இதே மாதிரி அடிங்க' என்று உள்வன்மம் கொண்ட சில மெய்யான சைக்கோக்களும் முகப்புத்தகத்திலும், ட்விட்டரிலும் மற்றும் இணையம் முழுதுமாகவும் குமுறித் தீர்த்தார்கள்.


பாலாவால் நல்ல கமர்சியல் சினிமாவெல்லாம் எடுக்கவே முடியாது என்பதாக ஒரு மாயையும் உலவவிடப் படுகிறது, சேதுவின் முதல் பாதியை விட ஒரு சிறந்த கமர்சியல் சினிமாவும் இருக்கிறதா என்ன? ஆட்டமும் பாட்டமுமான Entertainment Factorsஐ மட்டுமே  காமிப்பதற்கு நூறுக்கணக்கான் இயக்குநர்கள் இருக்கும் இந்தத் தமிழ் திரையுலகில் கடைநிலையின் கீழ் வாழும் மனிதர்களின் வாழ்க்கையையும், அவர்களின் வலியையும் பதிவு செய்வதற்கு இருக்கும் ஒரே இயக்குநர் பாலா மட்டுமே. "அப்படியானவர்களைக் கண்டாலே விலகி ஓடும் நம்மைப் போன்றவர்கள் பெரும்பாலராய் வாழும் சமூகத்தில், அப்படியானவர்களைத் தேடிப்பிடித்து அவர்களின் வாழ்க்கையை 'நான் கடவுள்' ஆக்கினானே - அவன் தான் பாலா. தலைமுடியைக் கரண்டி விட்டாலும், சித்தனாய் பெருங்குரலெடுத்துக் கத்த விட்டாலும், நந்தாவாய் கத்தி கொண்டு அறுக்க விட்டாலும், ருத்ரனாக காஞ்சா அடித்து குருட்டுப் பெண்ணைக் கருணைக் கொலை செய்தாலும், சாளூர் ஊர்ப்பெருக்கி ராசாவாக நொண்டியடித்து திரிந்தாலும் - பாலா படங்களில் உலவ விடும் மனிதர்கள் நம்மளவில் இயல்பில் இல்லாதவர்கள். ஆனால் அவர்களவில் எதார்த்தத்துக்கு மிக நெருக்கமானவர்கள். அப்படியானவர்களும் இருந்தார்கள் அல்லது இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது உலக உண்மை.
                                          

பாலாவின் குருவான 'ஒளிகளின் கலைஞன்' பாலுமகேந்திரா, 'மூடுபனி', 'மூன்றாம் பிறை' என தமிழின் உலக/உன்னத சினிமாக்களை எடுத்துக் கொண்டிருந்த பொழுது அவரிடம் "உங்களுக்கெல்லாம் கமெர்சியல் ஹிட்டடிக்கும் commercial\entertainment genere திரைப்படங்கள் எடுக்கவே தெரியாது" என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. அந்த விமர்சனத்தை மனதில் வைத்தே 'நீங்கதானடா கேட்டீங்க....' என்பதை முன்னிறுத்தும் விதமாக 'நீங்கள் கேட்டவை" என்ற பெயரில கமர்சியல் சினிமா எடுத்தார்.... 'அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி...' என்று சில்க்கை குத்தாட்டம் ஆட விட்டார். ஒப்பாமல் மீண்டும் வீடு, சந்தியா ராகம் என்று மனம் திரும்பினார். அதே நடந்தது பாலாவுக்கும். காமெடி எடுக்கிறேன், கமெர்சியல் எடுக்கிறேன் என்று வழிதவறிய ஆடாக அவர் எடுத்த 'அவன் இவன்' - ஒரு சிறிய பிழை. இன்று வெளியாகியிருக்கும் 'பரதேசி’ - அச்சிறிய பிழைக்கான மிகப்பெரிய திருத்தம்.

பி.ஹெச்.டேனியலின் 'எரியும் பனிக்காடு'தான் பரதேசியாகப் போகிறன் என்று அறிந்த பொழுதில் நண்பர்கள் உரைத்தார்கள் 'முடிவு பெரும்சோகம். பாலா கையில் கிடைத்திருக்கிறது. பாடாய்த்தான் படப் போகிறோம் நாம்.' படம் பார்த்த ஒவ்வொரு தருணத்திலும்  உணர்ந்து கொண்டிருந்தேன் நான். டீ, ஸ்டராங், லைட், Special tea, Iced Tea, லெமன் டீ, க்ரீன் டீ, கட்டாஞ்சாயா என்று வித விதமாக நாம் தினம் தினம் சுவைக்கும் தேநீருக்குப் பின்னால் எத்தகைய வலி மிகுந்த வரலாறு இருக்கிறதென்பதை எதார்த்தத்திலிருந்து எள்ளளவும் மீறாமல் எடுக்க நினைத்தானே. இவன் தான் பாலா. வாரத்துல அஞ்சு நாள் வேலை, பாதிநேரம் FB, Twitter... சனி ஞாயிறு லீவ், வீக்கெண்ட் மாயாஜால், AGS. போக வரக் காரு, பைக். இப்படி ஒரு வாழ்க்கையை எத்தனை குறை சொல்கிறோம் நாம். "Working environment" சரியில்ல, சம்பளம் பத்தல, இந்த வாழ்க்கை எனக்கு மட்டும் ஏன் சார் இப்படிப் பண்ணுது என்று மேம்போக்காய் சொல்லும் முன்னர் ஒவ்வொருவரும் இந்தப் படத்தை ஒரு முறை பார்க்கலாம். கண்டிப்பாக பார்க்கனும். நோட்டீஸ் பீரியட் முனு மாசம் என்பதால் கடுப்பாக இருக்கிறது என்று சென்ற வாரத்தில் விசனப்பட்ட நண்பனுக்கு அனுப்பியிருக்கிறேன் - "பரதேசி படம் கண்டிப்பா பாரு மச்சி."


அதர்வா... அடுத்த 30, 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கைக்கான மொத்த அடித்தளத்தையும் அழகாக அமைத்து கொள்ள வேண்டி இப்படத்தில் உழைத்திருக்கிறாஆஆஆஆஆர். அது சர்வ நிச்சயமாக வீணல்ல. க்ளைமேக்ஸ் காட்சி ஒன்று போதும்...  அது போலவே தன்ஷிகாவும், வேதிகாவும். அதர்வாவின் பாட்டியாக நடித்திருக்கும் கூன் மூதாட்டி, கங்காணியாக நடித்திருக்கும் நபர், கருத்தகன்னியாக நடித்திருக்கும் அழகி ஆகியோரும் குறிப்பிடப் பட வேண்டியவர்கள்.  எனக்கு மொத்த படத்திலும் விளங்காத ஒரே ஒரு விஷயம் யாதெனில் - அந்த கிறித்தவ டாக்டர் மற்றும் அவருடைய வெள்ளைக்கார மனைவி கதாப்பாத்திரங்களின் மூலம் சொல்ல விழையப்பட்ட விஷயம் என்ன..? புத்தகம் படித்தால் விளங்கலாம். விளங்கியவர்கள் யாரேனும் இருந்தால் விளக்கலாம்.

பாலாவுக்குள் போதையில் உழன்று கொண்டிருந்த ஒரு சராசரி வாழ்க்கையைத் தாண்டி ஏதோவொன்றுக்கான விதையை விதைத்தது என அவர் சொல்லுவது "தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்" என்ற நாஞ்சில் நாடனின் புத்தகத்தில் இருந்த 'எடலக்குடி ராசா' என்னும் சிறுகதையைத்தான். அத்தகைய நாஞ்சில் நாடனின் வசனங்கள் படத்தை வேறுதளத்துக்கு எடுத்துச் செல்ல தவறவில்லை. செழியன் படத்தின் ஒளிப்பதிவாளர். கதை நடக்கும் காலகட்டத்துக்கே நம்மை கூட்டிக் கொண்டு செல்வதில் இவருடைய பங்கும் அளப்பரியது. உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கும் முகப்புத்தக நண்பர் லக்ஷ்மன் ராஜா கண்ணனுக்கும் வாழ்த்துகள். நல்லா வருவீங்க பாஸ். கலை இயக்குனர் பாலசந்தர்... அட்டகாசம். இம்மாதிரியான ஒரு கதைக்களத்தை கண்முன்னிறுத்த வேண்டி அசுர உழைப்பு உழைத்திருக்கிறார். 



இசைக்கடவுள் இளையராஜாவால் controversial ஆக 'So called genius' என்றழைக்கப்பட்ட - பட்டம் கொடுக்கப்பட்ட ஜி.வி.பிரகாஷ் தான் இந்தப்படத்தின் இசை. மிக மிக நேர்த்தியாகத்தான் இருக்கிறது பிண்ணனியிசையும், பாடல்களும். ஆனாலும் பல காட்சிகளில் தோன்றியது, 'பட்டம் வாங்கிய பாலகனுக்குப் பதிலாக பட்டம் கொடுத்த கடவுளே இருந்திருந்தால்....' இன்னுமொரு ஓம் சிவோகமோ, எளங்காத்து வீசுதேவோ, கானகருங்குயிலேவோ நமக்குக் கிடைத்திருக்கக் கூடும். பாடல் வரிகள் எல்லாம் கவிப்பேரரசு வைரமுத்து. ரத்தம் கலந்து எழுதியிருப்பதாகச் சொன்னதாய்ச் சொன்னார்கள். இவ்வரிகளில் மொத்தக் கதையையும் பஞ்சம் பிழைக்கப் போகிறவர்களின் ஆதியந்த வலியையும் உள்ளடக்கியிருப்பதில் அது மிகையில்லையெனவே படுகின்றது.

ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா...
ஹோ... காடுகளே கள்ளிகளே போய் வரவா...
காலோடு சரல கிழிக்க கண்ணோடு புழுதி அடிக்க...
ஊர் தாண்டியே ஊர் தேடியே ஊர் போகுதே...
கருவேலங் காடு கடந்து கல்லுதும் மேடும் கடந்து...
ஊர் சேரலாம் உசுர் சேருமா வழி இல்லையே...
கங்காணி பேச்ச நம்பி சனம் போகுதே ஓ...
நண்டுகள கூட்டிக் கொண்டு நரி போகுதே...
உடல் மட்டும் முதலீடாக ஒரு நூறு சனம் போறாக...
உயிர் மீழுமோ உடல் மீழுமோ யார் கண்டது...

மொத்தத்தில் நியாயம்மாரேஏஏஏ, வழமை போலவே ஒவ்வொரு காட்சியும்Reality எனப்படும் எதார்த்தத்திலிருந்து கொஞ்சமும் மீறாமல் எடுக்கபட்டிருப்பதிலும், அதற்காக வேண்டி மெனெக்கெட்டிருப்பதிலும், அதற்கான அசுர உழைப்பைக் கொட்டியிருப்பதிலும், ஐயந்திரிபற சொல்லலாம் பரதேசி - Itz A Film By Bala.

Tuesday, February 19, 2013

கேலிபரில் வந்த கடவுள்...

காலை அலுவலகம் வரும் வழியில் சோழிங்கநல்லூர் சிக்னலின் மஞ்சளை வேகமாய் கடக்க முயலும் பொழுதிலேயே சிக்னல் சிவப்பாக மாறிவிட, எதிர்ப்புற வண்டிகளும் வேகமெடுக்க நிற்க வேண்டியதாகி விட்டது. வெயில் வேறு கொடுமைப்படுத்த இன்னும் ஐந்து நிமிடங்கள் நிற்க வேண்டும் என்று நினைக்கையிலேயே ஆயாசமாக இருந்தது. அலுவலகக் கடுப்புகள் ஒன்றிரண்டை யோசிக்க யோசிக்க வெளியெறிச்சல் வேறு உள்ளெரிச்சலாய் மாறிக் கொண்டிருந்தது. த்ச் த்ச் என எரிச்சலில் உச்சுக் கொட்டிக் கொண்டிருந்த பொழுது Barricadeன் அந்தப்பக்கத்தில் இருந்து அதாவது Wrong Sideலிருந்து வந்த ஒரு பழைய பஜாஜ் கேலிபர் வண்டிக்காரர் நேராக வந்து அவரது முன் சக்கரத்தால் எனது முன்சக்கரத்தில் முட்டு முட்டி தள்ளாடி நிறுத்தினார்.. நானும் சற்றே தடுமாறினாலும் சுதாரித்துக் கொண்டேன். இருந்த எரிச்சலில் ஹெல்மெட்டைக் கழற்றி விட்டு முறைத்தேன். அவர் பற்கள் பலவற்றையும் காட்டியவராய் "ஜ்ஜாரி சார்" என்றார். இருந்த எரிச்சலுக்கு தீனியாய் ஒருத்தன் சிக்கினால்.. அதுவும் சிக்கிவிட்டு சிரித்தால்...



"ஹலோ பாஸ்.. இடிச்சுட்டு சாரி சொன்னா ஆச்சா? கண்ணு என்ன பொடனிலயா இருக்கு?"


"இல்ல சார்.. ப்ரேக் சரியா...."


"ப்ரேக் புடிக்கலேன்னா... உங்க வண்டிதான? எதிர்ல பஸ் வந்தா நேராப் போய் வுடுவீங்களா...?"

"-----"


"நீங்க பாட்டுக்கு தட்டிட்டு போயிருவீங்க... கீழ வுழுந்தா யாரு பாக்குறது... " இத்யாதி இத்யாதி எனக் கத்திக் கொண்டிருந்த பொழுதே உச்ச வேகத்தில் சைரன் ஒலியோடு ஒரு ஆம்புலன்ஸ் எங்களைக் கடந்து திரும்பியது. ஆம்புலன்ஸைக் கண்ட மாத்திரத்தில் அந்தக் கேலிபர்காரர் கால்களை ஊன்றி நின்று, உதட்டருகே விரலை மடித்து முனுமுனுத்தவாறே பிரார்த்திக்க ஆரம்பித்து விட்டார். 'பிதா சுதன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே... ஆமென்.." எனச் சிலுவை போட்டவராய் கண்கள் திறந்து என்னைப் பார்த்து...


"ஆம்புலன்ஸ்ல... யாரோ என்னமோ பாவம்.." என்றார்...


பளார் பளார் பளார்...

இம்முறை அதிகதிக சங்கடத்தோடு நான் சொன்னேன்...


"சாரி பாஸ்..."
 
அவருடைய சிரிப்பும் சிக்னலின் பச்சையும் ஒன்றாய் விழ வண்டியைக் கிளப்பிக் கொண்டு வந்து விட்டேன். OMRன் வானம் முழுக்க கமலின் தடுமாற்றக் குரல் அசீரிரியாய் ஒலித்துக் கொண்டேயிருந்தது.. "யாருன்னே தெரியாத ஒரு பையனுக்காக கண்ணீர் வுடுற மனசு இருக்கு பாருங்க.. அதான் சார் கடவுள்...."


ம்ம்... கடவுள்கள் சென்னை தெருக்களிலும் ப்ரேக் பிடிக்காத கேலிபர்களிலும் சுற்றிக் கொண்டும் – அவ்வப்பொழுதில் நம்மை இடித்துக் கொண்டும்தானிருக்கிறார்கள். . பிதா சுதன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே... ஆமென்..
 
Copyright © 2010 நெல்லை நண்பன். All rights reserved.